July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகளை விடுதலை செய்ததைப்போலவே, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுற்ற போது சரணடைந்த விடுதலைப்புலி போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்திருந்தனர். அந்த நேரம் அவர்களுக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ளனர்.

அவர்களின் விடுதலை தொடர்பில் பிரதமரை நேரில் சந்தித்து எழுத்து மூலமாக கடிதமொன்றை கொடுத்திருந்தோம். எனவே பிரதமர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மக்களுக்கு மூன்று வேளை உணவே போதுமானது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார். இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஒரு சிலர் உங்களுக்கு ஆதரவாக வாலாட்டுவார்களே தவிர, உண்மையான தமிழர் தமிழன் என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல் அமைச்சர் சரத் வீரசேகரவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.இது அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா என பிரதமர் அறிவிக்க வேண்டும். மன்னார் வங்காலை இராணுவ சோதனை சாவடி பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவத்தினர் தாக்கியுள்ளனர், முகக்கவசம் அணியவில்லை, அடையாள அட்டை இல்லையென கூறி தாக்கியுள்ளனர். எமது மக்களை தாக்க வேண்டும் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது, இந்த ஆட்சியில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.