July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீள்குடியேற்ற அமைச்சு நீக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினையை உருவாக்கும்’

வரவு-செலவு திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதாகவும், 25 வருடங்களாக இடம்பெற்று வந்த மீள்குடியேற்ற அமைச்சு இம்முறை இல்லாதமை மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது. அதிலும் தற்போது கோப்பாய் பிரதேச சபைக்கு கீழ் இருக்கும் அம்மன் வீதி, இதனை அமைப்பதற்காக வீதி அதிகார சபையினூடாக அரசாங்கம் அடிக்கல் நாட்டியிருந்தது.
அத்துடன் பெயர் பலகை ஒன்றையும் வைத்திருந்தார்கள். குறித்த வீதி பிரதேச சபைக்கு கீழ் இருப்பதால் அது தொடர்பான அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெறாததால் பெயர் பலகையை பிரதேச சபை நீக்கியிருந்தது. அது பாரிய பிரச்சினையாக மாறியது. பிரதேச சபை தலைவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த விடயமானது மத்திய அரசாங்கம் பிரதேச சபையின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

கடந்த அரசாங்கம் கம்பெரலிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும்போது பிரதேச சபைகள் ஊடாகவே அதனை முன்னெடுத்தது. வடக்கில் தொழில் இல்லாத பிரச்சினை இருக்கின்றது. இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் முதலீட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதேபோல் எமது மக்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து வாழ விருப்பம் தெரிவித்திருக்கின்றபோதும், அந்த வசதிகள் அங்கு இல்லாமல் இருக்கின்றன.

அதேபோன்று வீடமைப்பு திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் பல இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வடக்கில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்று பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றனர். அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களின் போது வெளிநாட்டு பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகவும் கவனம் செலுத்தி அந்த பட்டதாரிகளையும் அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கும் தொழில்வாய்ப்பில் இணைத்துக்கொள்ளவேண்டும் எனவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.