July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கூட்டமைப்பை தடைசெய்தாலும் வேறு கட்சியில் போட்டியிடுவோம்’ – சீ.வி.கே.சிவஞானம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்” என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சாணக்கியன் மற்றும் சுமந்திரன் போன்றோர் பொது இலக்கில் ஒன்றாக செயற்படுகின்றார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அவர்கள் புறக்கணிக்கிறார்களா?  என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும். அவர்களுக்குரிய அறிவித்தல் முறையாகவே கிடைக்கின்றது என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகவே செயற்படுகின்றனர். கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் பாராளுமன்ற அமர்வுகளில் ஆவேசமாக பேசுகின்றனர்.

மேலும் கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக பாராளுமன்றில் பதிலளிக்கும் போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கூட்டமைப்பை தடை செய்வதென்பது மேலோட்டமான பேச்சு தான்.

ஆனால் ஜனநாயக நாட்டில், நினைத்தபாட்டில் ஒரு கட்சியை தடைசெய்ய முடியாது. தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என்று சிவஞானம் தெரிவித்துள்ளார்.