July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் மீனவ படகுகளுக்கு சேதம்: மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புரவி சூறாவளி காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 142 மீனவ படகுகளும், 60 வெளியிணைப்பு இயந்திரங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தடுப்பணைகள் மற்றும் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் இல்லாமை காரணமாகவே மீன்பிடி உபகரணங்கள் இவ்வாறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ். வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான மீனவ படகுகளும் வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை வசதிகளை ஏற்படுத்தித் தருமதாறு உரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அது தொடர்பில் அவர்களால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என வர்ணகுலசிங்கம் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட நிவர் மற்றும் புரவி சூறாவளி காரணமாக மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் இதுவரை தமக்கான நிவாரண உதவிகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கடற்றொழிலாளர் சங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.