July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்பு; முன்னாள் கடற்படை தளபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெற்றது என தான் கருதுவதாக தெரிவித்துள்ள முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண, ஜஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்;

சரியான தரப்பிற்கு புலனாய்வு செய்திகளை அனுப்ப தவறியதன் காரணமாக அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது.
ஜஹ்ரான் ஹாசிமை கண்காணிப்பதற்கு 2004 முதல் இராணுவ புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.எனினும் அந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

முன்னைய அரசாங்கத்தில் புலனாய்வு அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டன. அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.நான் புலனாய்வு பிரிவினை பாதுகாக்க முற்பட்டதால் நானும் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவனே.

மாவனெல்லயில் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள், வவுணதீவில் பொலிஸாரின் கொலைகள் குறித்த விசாரணைகள், வனாத்தவில்லில் வெடிமருந்து மீட்கப்பட்டமை போன்றன சிஐடியினர் சரியான பாதையை பின்பற்றாததன் காரணமாக பிழையாக வழிநடத்தப்பட்டன.இதன் காரணமாகவே தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.