July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தொடர்பான புதிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்வதால் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு கொவிட் தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மோதரை, கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராமசேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் ரந்தியஉயன வீட்டுத்தொகுதி மற்றும் பேர்ஹசன் வீதியின் வலதுபக்கம் ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுனுப்பிட்டி கிராமசேவகர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் 60 ஆம் இலக்கத் தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் புதிதாக நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் விஜயபுர கிராமசேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் கெரவலப்பிட்டிய கிராமசேவகர் பிரிவு, ஹேக்கித்த கிராமசேவகர் பிரிவு, குறுதுஹேன கிராமசேவகர் பிரிவு, எவரிவத்த கிராமசேவகர் பிரிவு, வெலிகடமுல்ல கிராமசேவகர் பிரிவு ஆகிய பகுதிகள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பேலியகொட பொலிஸ் பிரிவில் பேலியகொட கிராமசேவகர் பிரிவு, கஹபட கிராமசேவகர் பிரிவு, மீஹவத்த கிராமசேவகர் பிரிவு மற்றும் பட்டிய கிராமசேவகர் பிரிவு தவிர்ந்த மற்றைய பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

அதேபோன்று களனி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.