October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா: ஹட்டன் – தண்டுகலா தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன்- நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்தத் தோட்டத்தின் கீழ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியிலிருந்து வெயியேறுவதற்கும் வெளி இடங்களில் இருந்து அங்கு உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டுகலா தோட்டத்தில் இதற்கு முன்னர் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம்  16 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரிந்து தமது சொந்த ஊரான தண்டுகலா தோட்டப்பகுதிக்கு திரும்பியவர்கள் மூலமே இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.