July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்னா அணிக்கான முதலாவது போட்டியில் அசத்திய வியாஸ்காந்த்

photo: Facebook/ Lanka Premier League

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கான முதலாவது போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி மாணவனான வியாஸ்காந்த், இலங்கையில் நடைபெறும் சர்வதேச தர கிரிக்கெட் போட்யொன்றில் பங்கேற்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதலாவது வீரராகவும் இடம்பிடித்துள்ளார்.

நேற்று கொழும்பு கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய அவர், 4 ஓவர்களுக்கு 29 ஓட்டங்களைக் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

கொழும்பு கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான அன்ட்ரு ரசல், தினேஷ் சந்திமால் ஆகியோர் வியாஸ்காந்தின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது தினறியதோடு, அணித் தலைவர் மெதிவ்ஸ் ஆட்டமிழந்துள்ளார்.

வியாஸ்காந்தின் சிறந்த பந்து வீச்சு மற்றும் நிதானமான ஆட்டம் குறித்து, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னணி கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹெல ஜயவர்தன ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

குமார் சங்கக்கார, ‘இது பெரும் வேலையின் ஆரம்பம் மாத்திரமே’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வியாஸ்காந்துக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருவதைக் காணலாம்.