June 16, 2025 14:16:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலை வன்முறையில் கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களை தகனம் செய்ய வேண்டாமென கோரிக்கை

மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மரண விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கைதிகள் வன்முறையில் ஈடுபடுவதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறையில் காணப்பட்ட நெரிசல், கொரோனா வைரஸ் பற்றி பயம் மற்றும் அதற்கு எதிரான போராட்டம் ஆகியவையே பிரதான காரணம் என மனித உரிமைகள் ஆணையாளர் ரமணி முத்தெட்டுவேகம குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 29 ஆம் திகதி நடந்த மோதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு சிறைச்சாலைக்கு சென்று இரண்டு முறை விசாரித்ததைத் தொடர்ந்து முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மஹர சிறைச்சாலை உள்ளிட்ட சிறைகளில் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய கைதிகளை அழைத்து வரும்போது, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைதிகளின் உடல்நலம் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதிகள் மத்தியில் அச்சத்தை குறைக்க வேண்டுமாயின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் தனி சிறை மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் அபாயத்தில் உள்ள கைதிகள் மற்றும் சிறிய தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.