July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கில் சூறாவளி  ஏற்படும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் என மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகிலும், தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்படுகின்ற தாழமுக்கமானது, கடந்த 6 மணித்தியாலயங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்போது வலுவான தாழமுக்கமாக தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீட்டர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது அடுத்துவரும் வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக வலுவடைந்து, திருகோணமலை பிரதேசத்திற்கு அருகில்  நாளை 2ம் திகதி மாலை அல்லது இரவு வேளையில்  ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு, வடக்கு, வடமத்திய ஊவா மாகாணங்கள், அம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.