இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரண்டுநாள் பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பிலும் பேசியதாக சம்பந்தன் தெரிவித்தார்.
அஜித் டோவலின் இலங்கை வருகை, அவர் இலங்கையில் சந்தித்த தரப்பினர் மற்றும் அவருடைய நிகழ்ச்சி நிரல்களை ட்விட்டரில் பதிவு செய்துவந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் சம்பந்தனுடனான சந்திப்பு தொடர்பில் எந்த தகவலையும் வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்-சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசியல் தீர்வு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தகவல் தெரியாவிட்டாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின் உயர்மட்ட தலைவர்களை மாத்திரம் சந்தித்த அஜித் டோவால், சம்பந்தனை சந்தித்திருப்பது முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இணையம் ஊடாக சந்தித்து பேச்சு நடத்திய வேளையில், தமிழ் மக்களின் உரிமைகள் குறித்த இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்திய பிரதிநிதியொருவர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.