July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா பிரதேசங்கள் தொடர்பான புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சில பிரதேசங்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் அதிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கரையோரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் கொழும்பு மாவட்டத்தில் மோதரை, புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பேலியாகொட, களனி, வத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இராணுவத் தளபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.