Photo: Facebook/ Anusha chandrasekaran
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனால் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி’ எனும் தொழிற்சங்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அனுஷா சந்திரசேகரன், கடந்த பொது தேர்தலில் தனக்கு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அளித்த வாக்குகளை, மக்களால் தனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு தந்தை வழியில் மக்கள் சேவையை ஆரம்பிக்க இந்த கட்சியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியில் அனுஷா சந்திரசேகரன் பிரதி பொதுச் செயலாளர் பதவியை வகித்த நிலையில், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கட்சியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து கட்சியில் இருந்து அனுஷா நீக்கப்பட்டார்.
இதனையடுத்து அனுஷா சந்திரசேகரன் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டதுடன், தற்போது புதிய கட்சியை அமைத்துள்ளார்.