October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்திய மீனவர்களாலே இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை உருவாகியிருக்கும்” நிரோஷன் பெரேரா

இந்திய மீனவர்களினூடாக  வடக்கு மீனவர்களுக்கு கொவிட் -19  வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும். அதன்மூலம் இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை உருவாகியிருக்கலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கடற்தொழில், பெருந்தோட்டத்துறை மற்றும் காணி அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்;

நாட்டில் மீன்பிடித்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவல் முழுமையாக மீனவர் சமூகத்தை பாதித்துள்ளது.

இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையில் மீன்பிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது. மீன்பிடித்துறை அமைச்சை விடவும் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் தலையிட வேண்டும்.

எனவே இந்திய தூதரகத்துடன் பேசி இந்த விடயத்திற்கு தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

ஆனால் இந்திய தூதரகத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை, ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக இந்திய படகுகளை எமது கடல் எல்லைக்குள் செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மீனவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் எமது கடல் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

நிலத்தை மட்டுமல்ல, கடல் எல்லையையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.