May 30, 2025 21:00:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எத்தியோப்பியாவில் போர் வலயத்திற்குள் சிக்கியிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Photo; Twitter/ SriLanka in Ethiopia

எத்தியோப்பியாவில் போர் வலயத்திற்குள் சிக்கியிருந்த 38 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் அங்கிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 38 இலங்கையர்களும் டைக்ரே பிராந்தியத்தில் இருந்து ஐநா படையினரால் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்கள் அனைவரும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை (TPLF) சேர்ந்த பிராந்தியப் படைகள் கூட்டாட்சி இராணுவத் தளத்தைத் தாக்கியதை அடுத்து, எத்தியோப்பியா அரசு நவம்பர் 4 ஆம் திகதி முதல் டைக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளைஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து மத்திய ராணுவத்திற்கும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது.

தற்போது, டைக்ரே பிராந்தியம் முழுவதும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு விபரங்கள் தொடர்பான சரியான தகவல்கள் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.