October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

‘நிவர்’  புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அந்த ஊடக சந்திப்பில் கூறுகையில்;

வடமாகாண மீனவர்கள்  நீண்டகாலமாக பலதரப்பட்ட வகையில் பொருளாதார பின்னடைவை சந்தித்து கொண்டு வருகிறார்கள்.

இந்தியப் இழுவை படகுகளின் அத்துமீறிய வருகை, உள்ளூர் சட்டவிரோத மீன்பிடிகளால் மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்த நிலையில் நிவர் புயல் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் மீனவ மக்கள் கடலுக்கு செல்லாது தங்கள் தொழில்களை விட்டு வீடுகளில் முடங்கியுள்ளார்கள்.

இதனால் அவர்கள் அன்றாட வருமானம் இன்றி பட்டினியை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, விரைவில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சு என்பவை பட்டினியை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொடர்பாக  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.