
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் ஆஜராகியுள்ளார்.
8 ஆவது தடவையாக இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில், அவரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் அவரிடம் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பாதுகாப்பு அமைச்சும் இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில், பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும், அந்த குற்றச்சாட்டுகளை மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் ஆஜராகி சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.