
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகளில் ஏற்பட்டுள்ள சிக்கலில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று நுவரெலியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவுசெய்வதற்காக வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று பாடசாலைகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வாறானதொரு நிலைமை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட போது, சரியான முறையில் தீர்வுகள் வழங்கப்பட்டாலும், இம்முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கடைபிடிக்கப்படவில்லை அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளிகளில் ஏற்பட்டுள்ள முறைகேட்டின் காரணமாக, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.