July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு- கிழக்கு கரையோரப் பகுதிகளில் சூறாவளி அபாயம்

forecast photo: Deparment of Meteorology

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளை அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளிக்காற்று தாக்கும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலயமாக மாற்றமடைந்து, 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்தொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது சூறாவளி வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வட கிழக்கு கரையோரத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் பிராந்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை வீழ்ச்சியும், சில பிரதேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியமும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தாழமுக்கம் காரணமாக, புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழையுடன் காற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்படும் என்பதால், பொது மக்களும், மீனவர்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.