![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/ankajan.jpg?fit=960%2C640&ssl=1)
30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர்நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என யாழ் பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண பொலிஸாரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகிய குறித்து பொலிஸ் நிலைய அதிகாரி, தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என கூறியிருந்தார்.
30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர்நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொலிஸ் துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.