
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் உரையாடிய வேளை பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பினரும் பேசிக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உணவகத்தில் சுமந்திரனை சந்தித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ”நாங்கள் மீளவும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சுமந்திரன், “நாங்கள் அதற்குத் தயார். நாங்கள் தயார் என்பதை வெளிப்படையாகக் கூறியும் விட்டோம். நீங்கள் தான் நேரம் ஒதுக்கி, அழைப்பு விடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
“ஆமாம், நாம் பேசுவோம்.” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூற, “பேச்சுக்கான நேரம், திகதி போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அறிவிக்கின்றேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடமும், சுமந்திரனிடமும் ன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.