October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அணித்தெரிவு சம்பந்தமாக மக்கள் தேவையற்றதைப் பேசுகிறார்கள்; கங்குலி கவலை

கிரிக்கெட் வீரர்களை அணிக்கு தெரிவுசெய்வது தொடர்பாக சரியாகப் புரிந்துகொள்ளாமல் மக்கள் தேவையற்றதைப் பேசுவதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரான சௌரவ் கங்குலி கவலை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் தெரிவில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்திருந்தது. காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி அரைச்சதம் பெற்று அணிக்கு ஐந்தாவது தடவையாக சாம்பியன் பட்டம் ஈட்டிக்கொடுத்தார்.

வருண் சக்கரவர்த்தி காயமடைந்த போதிலும் அவுஸ்திரேலிய விஜயத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். பின்னர் பலவாறான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜனுக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறான சூழலில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரான கங்குலி, வீரர்களின் உடற்தகுதியைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாமல் மக்கள் தேவையற்றதைப் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் உடற்தகுதி பற்றி அணியின் உடற்கூற்று மருத்துவருக்கும், நிர்வாகம் சார்ந்த அங்கத்தவர்களுக்குமே தெரியும். ஆனால், மக்கள் அதனை புரிந்துகொள்ளாமல் தேவையற்றதைப் பேசுகின்றனர் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.