
Photo: Twitter/ OfficialSLC
6 ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும், அவர்களுக்கு விசேட வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்யவுள்ளன.
இதேவேளை அவர்கள் பயணிக்கும் வழிகளில் கிரிக்கெட் ரசிகர்களும் அவர்களுக்கு வரவேற்பளிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது.
இதில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்கள்.
இதனை தொடர்ந்து 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும்,சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். வீழ்த்தினார்.
அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதேவேளை ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.