October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கால்பந்தாட்டம்: மென்செஸ்டர் யுனைடட் அபார வெற்றி

ஐரோப்பிய செம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ஆர்பி லெப்ஸிங் கழக அணிக்கு எதிரான போட்டியில் 5-0 எனும் கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடட் அணி அபார வெற்றிபெற்றது.

ஓல்ட்ரெபர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் அணி வீரர் கிரீன்வூட் 21 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். எதிராளியான ஆர்பி லெப்ஸிங் கழக அணியால் கோலடிக்க முடியாது போக 1-0 என முதல் பாதியில் மென்செஸ்டர் யுனைடட் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய மென்செஸ்டர் யுனைடட் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். குறிப்பாக மாற்று வீரராகக் களமிறங்கிய ரஷ்போர்ட் ஹெட்ரிக் கோலடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார்.

74 மற்றும் 78 ஆவது நிமிடங்களில் கோலடித்த ரஷ்போர்ட் 90 ஆவது நிமிடத்துக்குப் பின்னர் உபாதைக்கான மேலதிக நேரத்திலும் கோல் போட்டார். இதனிடையே 87 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மார்டியல் கோலொன்றைப் பெற்றுக்கொடுத்தார்.

ஐரோப்பிய செம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் எச் குழுவில் இடம்பெற்றுள்ள மென்செஸ்டர் யுனைடட் அணி தாம் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.

இதேவேளை, ஜுவான்டஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் பார்ஸிலோனா கழக அணி 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியது. டெம்லே 14 ஆவது நிமிடத்திலும், 90 ஆவது நிமிடத்துக்கு பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பி லியோனல் மெஸியும் கோல் போட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.