July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோல்

ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற எல்.பி.எல் தொடரின் 19 ஆவது லீக் போட்டியில், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றதுடன், முதல் குவாலிபையர் போட்டிக்கான தகுதியையும் பெற்றுக் கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஸ 23 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஜப்னா அணியின் பந்து வீச்சில் வியாஸ்காந்த், பிரவீன் ஜயவிக்ரம மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஜப்னா கிங்ஸ் அணி எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக அந்த அணி 109 ஓட்டங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கோல் கிளேடியேட்டர்ஸ் சார்பாக, சமித் பட்டேல் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் காலி கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.

மறுபுறத்தில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்த ஜப்னா கிங்ஸ் அணி, இம்முறை எல்.பி.எல் தொடரில் 2ஆவது தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து, முதலாவது குவாலிபையர் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஜப்னா கிங்ஸ் அணி, குவாலிபையர் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே தக்கவைத்திருந்த நிலையில், குவாலிபையரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை 19 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.