July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகும் விராட் கோலி

Photo: Twitter/BCCI

இந்தியா ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின்  டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விராட் கோலி தலைவராக பணியாற்றினார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நிறைவுக்கு வந்த டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பு அவர் டி-20 தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இற்றிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனவே, விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே தலைவராக உள்ளார்.

இதற்கிடையே தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் வாமிகாவின் முதலாவது பிறந்த நாளையொட்டி அவர் ஒருநாள் தொடரில் ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி அவரது குழந்தைக்கு முதலாவது பிறந்த நாளாகும். இதில் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடர் ஜனவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனவே, தன்னுடைய மகளின் முதலாவது பிறந்த நாளில் குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதால், ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி பி.சி.சி.ஐயிடம் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில்தான் அவர் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.