July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021 தொடரில் களமிறங்கும் நான்கு தமிழ் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் சபையும், ஐபிஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது எல்.பி.எல் தொடர் கடந்த 5ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது.

இலங்கையின் நட்சத்திர வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் பங்குகொண்டுள்ள இம்முறை எல்.பி.எல் தொடரில் இலங்கையில் உள்ள ஐந்து தமிழ் வீரர்கள் 3 அணிகளுக்காக களமிறங்கவுள்ளனர்.

இதன்படி, இம்முறை எல்.பி.எல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியில் வடக்கைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய 5 தமிழ் பேசுகின்ற வீரர்களில 3 பேர் மாத்திரமே இம்முறை எல்.பி.எல் இல் ஜப்னா கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண எல்.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் ரட்னராஜா தேனுரதன் ஆகிய மூவருமே இம்முறை எல்.பிஎ.ல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

ஏனைய இரண்டு வீரர்களான செபஸ்டியம்பிள்ளை விஜயராஜ் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகிய இருவரும் இம்முறை எல்.பி.எல் தொடரில் எந்தவொரு அணிகளாலும் வாங்கப்படவில்லை.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் முன்னதாக நடைபெற்ற எல்.பி.எல் ஏலத்தின் போது கபில்ராஜ் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

எனினும், அந்த அணி நிர்வாகத்தினால் கடைசி நேரத்தில் அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால் அவருக்கு கொழும்பு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது அவருக்கு மாத்திரமல்லாது, இலங்கையில் உள்ள கிரிக்கெட்டை விரும்புகின்ற தமிழ் பேசுகின்ற ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும், கவலையையும் கொடுத்துள்ளது.

எனவே, கடந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் 6 தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், இம்முறை அது நான்காக குறைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

எவ்வாறாயினும், இம்முறை எல்.பி.எல் தொடரில் விளையாடவுள்ள நான்கு தமிழ் பேசுகின்ற வீரர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கு பார்ப்போம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த்

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் வியாஸ்காந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதில் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் அஞ்சலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைக் கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த எல்பிஎல் தொடருக்குப் பிறகு பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளும், 19 வயதுக்குட்பட்ட அணி போட்டிளும் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டதால் வியாஸ்காந்த்துக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணிக்காக அவர் விளையாடியிருந்தார்.

எனவே, கடந்த ஆண்டைப் போல இம்முறை எல்.பி.எல் தொடரிலும் வியாஸ்காந்த்துக்கு ஒருசில போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெய்வேந்திரம் டினோஷன்

யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் உதவித் தலைவரான தெய்வேந்திரம் டினோஷனுக்கு கடந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் எந்தவொரு போட்டியிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான இவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘Super Provincial’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தம்புள்ளை அணியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட்  தொடர்களிலும் விளையாடாத டினோஷனுக்கு இம்முறையும் ஜப்னா அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிராசாதமாக பார்க்கப்படுகின்றது.

ரட்னராஜா தேனுரதன்

இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதன், இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ பிரீமியர் லீக் டி-20 தொடரில் விளையாடியிருந்த அவர், 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற தேனுரதன், அந்த அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார்.

எனவே. ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேராவுடன் இராணுவ கிரிக்கெட் அணியின் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள தேனுரதனுக்கு இம்முறை எல்.பி.எல் தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதுஷன் ரவிச்சந்திரகுமார்

கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் முன்னாள் வீரர் மதுஷன் ரவிச்சந்திரகுமார், இம்முறை எல்.பி.எல் தொடரில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

26 வயதுடைய சகலதுறை வீரரான இவர், ஆரம்ப காலத்தில் தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடியிருந்ததுடன். தற்போது செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

2015இல் தமிழ் யூனியன் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அறிமுகமான இவர், இதுவரை 17 முதல்தர போட்டிகளிலும், 24 லிஸ்ட் A போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரில் கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.