Photo: Twitter/BCCI
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை எடுத்தது. இதில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
அதன்பின் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து 540 ஓட்டங்கள் இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 56.3 ஓவர்களில் 167 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்ஸிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் மும்பை டெஸ்டை 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாவும், ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.