![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/11/SAvsNT.jpg?fit=800%2C450&ssl=1)
Photo: Twitter/ Cricket South Africa
‘ஒமிக்ரோன்’ வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.
இதில் நவம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பபட்டது.இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
எனினும், தென்னாபிரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் எனும் புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தொடரை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி போலெட்சி மொசெகி கூறும்போது, ‘தற்போது நிலவும் துரதிஷ்டவசமான சூழ்நிலையால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். நிலைமை சீரானபிறகு போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளோம்’ என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, ஒமிக்ரோன் வைரஸ் பரவலினால் கைவிடப்பட்ட இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும். முன்னதாக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 2022 மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.