July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாலியல் புகார்: காலவரையற்ற ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய வீரர்

Photo: Twitter/Cricket Australia

பாலியல் புகாரில் சிக்கிய அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் டிம் பெய்ன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிம் பெய்ன் தன்னுடன் பணியாற்றும் டஸ்மானியா கிரிக்கெட் சபையின் சக பெண் ஊழியருக்கு மோசமான பாலியல் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை அனுப்பியது குறித்த விபரங்கள் வெளியாகியதால் தலைவர் பதிவியிலிருந்து அவர் இராஜினாமா செய்தார்.

டிம் பெய்ன் அனுப்பிய குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் குறித்து அந்தப் பெண் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, டஸ்மானியா கிரிக்கெட் சபையில் புகார் செய்தார்.

அப்போது டிம் பெய்னிடம் இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டதில் எந்த விதிமுறை மீறலும், ஒழுக்க விதிமுறை மீறலையும் செய்யவில்லை என முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், டிம் பெய்ன் அனுப்பிய குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இதுபோன்ற தரமற்ற செயல்களைச் செய்தவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து டிம் பெய்ன் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்மானியா கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணிநேரமாக டிம் பெய்னுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையின் முடிவில் டிம்பெய்ன் தற்காலிகமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகி இருக்க முடிவு செய்துள்ளார். இதனால், ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடாமாட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், டிம் பெய்ன் விலகியது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.