July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜப்னா கிங்ஸ்’ அணியில் இணையும் இளம் சுழல் பந்துவீச்சாளர்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள எல்.பி.எல் தொடரில் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியுடன் இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம ஒப்பந்தம் செய்யப்ப்ட்டுள்ளார்.

எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் இந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றது.

இதில் அஞ்சலோ மெத்யூஸ், குசல் பெரேரா உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களை எந்தவொரு அணியும் வாங்கவில்லை. இதுதொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்க்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த 10 வீரர்களில் தலா இருவரை கட்டாயம் ஒவ்வொரு அணியும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அணி உரிமையாளர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, குறித்த 10 வீரர்களில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவை ஜப்னா கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

23 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்றார். இதில் நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

அத்துடன், குறித்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை எடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்டுக்களை எடுத்த உலகின் முதல் சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, ஜப்னா கிங்ஸ் அணியில் ஏற்கனவே வனிந்து ஹஸரங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்;.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாhதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.