![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/11/shreyas-iyer.jpg?fit=800%2C450&ssl=1)
Photo: Twitter/BCCI
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெறுவார் என இந்திய டெஸ்ட் அணித் தலைவர் அஜிங்கியா ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று ஆரம்பமாகிறது.
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அஜிங்கியா ரஹானே தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பாண்ட், மொஹமட் ஷமி ஆகியோருக்கும் பணிச்சுமை கருதி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதுடன், கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் அனுபவ வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை. எனவே, அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை இறுதிப் பதினொருவர் அணியில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறுவார் என்று அணித்தலைவர் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 4592 ஓட்டங்களை 52.18 சராசரியுடன் ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க்து.