July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு

Photo: Facebook/RCB

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும், ஐ.பி.எல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஏபி டிவில்லியர்ஸை பெங்களூர் அணி நிர்வாகம் நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இன்று திடீரென அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் இந்த விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் உள்ளிட்ட டி-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

இறுதியாக, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 2 அரைச்சதங்களுடன் 313 ஓட்டங்களைக் குவித்தார்.

ஏவ்வாறாயினும் ஐ.பி.எல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இதுவரை 170 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், 5162 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் இவர் 251 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.