July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபுதாபி டி-10 லீக்: சென்னை பிரேவ்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக நியமனம்

இந்த ஆண்டு அபுதாபி டி-10 லீக்கில் புதிதாக இணைந்துகொண்ட சென்னை பிரேவ்ஸ் அணியின் தலைவராக இலங்கை டி-20 அணியின் தலைவர் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் அபுதாபி டி-10 லீக்கின் ஐந்தாவது சீசன் இன்று முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை நடைபெற உள்ளது,

இந்த நிலையில், இம்முறை அபுதாபி டி-10 லீக்கில் புதிய அணியாக களமிறங்கவுள்ள சென்னை பிரேவ்ஸ் அணியில் நான்கு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இலங்கை டி-20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க தலைவராக செயல்படவுள்ளதுடன், இலங்கை வீரர்களான அஞ்சலோ பெரேரா, தனன்ஜய லக்ஷான் மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் அந்த அணிக்காக விளையாடவுள்ளனர்.

முன்னதாக இந்த அணியில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்ன மற்றும் சுழல்பந்துவீச்சாளரான மகீஷ் திக்ஷன ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் குறித்த இரண்டு வீரர்களும் உள்வாங்கப்பட்டதால் அவர்களுக்கு அபுதாபி டி-10 லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதேவேளை, இம்முறை அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கவுள்ள சென்னை பிரேவ்ஸ் அணியில் யூசுப் பதான், முனாப் பட்டேல், ரவி பொப்பாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை அபுதாபி டி-10 லீக்கில் இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் இசுரு உதான, பங்களா டைகர்ஸ் அணிக்காகவும், வனிந்து ஹஸரங்க டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், உபுல் தரங்க நொதர்ன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.