July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹேல ஜயவர்தனவிற்கு ஐ.சி.சி.யின் அதி உயர் கௌரவம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன, சர்வதேச கிரிக்கெட் சபையின் உயர் கௌரவமாக கருதப்படும்,  வரலாற்று கதாநாயகர்கள் (Hall of Fame) பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளிப்படுத்தியிருந்த சிறந்த அடைவுகளுக்காகவே, வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்காக 652 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் மஹேல ஜயவர்தன, 149 டெஸ்ட் போட்டிகள், 448 ஒருநாள் போட்டிகள் மற்றும் 55 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கிரிக்கெட் வீரராகவும் மஹேல ஜயவர்தன உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 49.84 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 11,184 ஓட்டங்களை குவித்திருக்கும் மஹேல ஜயவர்தன, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் 9 ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

மறுமுனையில் 34 டெஸ்ட் சதங்களை எடுத்திருக்கும் அவர் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் 6 ஆம் இடத்திலும் காணப்படுகின்றார். இந்த சதங்களுக்குள் மஹேல ஜயவர்தன தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்றுக் கொண்ட 374 ஓட்டங்களும் அடங்குகின்றன.

இதேநேரம் மஹேல ஜயவர்தன 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணிக்காகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் 2009ஆம் ஆண்டு, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இலங்கை அணியிலும் விளையாடிய மஹேல ஜயவர்தன, 2014ஆம் ஆண்டில் இலங்கை முதல் முறையாக டி-20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்ட அணியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை கொடுத்த மஹேல ஜயவர்தன, தற்போது டி-20 லீக் போட்டிகளில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு ஐ.சி.சியின் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்த 3ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.

இதேவேளை, மஹேல ஜயவர்தனவுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோன் பொல்லொக் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜனேட் பிரிட்டின் ஆகிய இருவரும் ஐ.சி.சியின் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.