July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை வீரர்களை இணைக்க பரிந்துரை

Photo: Twitter/IPG

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்படாத இலங்கை அணியின் 10 வீரர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அனைத்து அணிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

இம்முறை எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிலையில், வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சில முன்னணி வீரர்கள் இணைக்கப்படாமை தொடர்பில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக, டி-20 உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா, உப தலைவர் தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுக ஆகியோர் எல்.பி.எல் ஏலத்தில் எந்தவொரு அணிகளாலும் வாங்கப்படவில்லை.

இந்த நிலையில், மேற்குறித்த 8 வீரர்களுடன், சதீர சமரவிக்ரம மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோரையும் இணைத்து மொத்தமாக 10 வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் சபை, எல்.பி.எல் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளது. குறித்த இந்த 10 வீரர்களில் தலா இரண்டு வீரர்களை அணிகள் இணைக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, அடுத்துவரும் தினங்களில் அணிகள், இணைக்கப்படும் வீரர்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்.பி.எல் தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.