Photo: Twitter/ICC
இந்த ஆண்டு டி- 20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 167 மில்லியன் (16.7 கோடி) பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டது.
டி-20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரை சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கண்டுகளித்த பார்வையாளர்கள் எண்ணிக்கை பற்றிய விபரங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தகுதிச்சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகளின் முடிவில் 238 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத் தொடர் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 167 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியை 136 மில்லியன் பேர் பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.