July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் விலகல்

Photo: Twitter/ICC

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் காயம் காரணமாக  டி- 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி- 20 உலகக் கிண்ணத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் குழு 1-ல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும், குழு 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணி விளங்குகிறது.

எனவே, அபுதாபியில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், அந்த அணியின் அதிரடி ஆரம்ப வீரர் ஜேசன் ரோய், காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜேசன் ரோய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், காயம் காரணமாக ஜேசன் ரோய் விலகியுள்ளார்.

இதன்படி, அவருக்கு மாற்று வீரராக ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜேசன் ரோய் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.