June 17, 2025 22:28:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணி இலங்கையை வந்தடைந்தது

Phot0: Sri Lanka Cricket

ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவது அத்தியாயத்தின் ஓர் அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி  இலங்கையை வந்தடைந்தது.

டி-20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.

கொவிட் 19 கட்டுப்பாட்டு வலய விதிமுறைகளுக்கு உட்பட்டவாறு நடைபெறவுள்ள இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்று நவம்பர் 14 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

அதன்பிறகு முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 21 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, கிரைக் ப்ராத்வைட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் அறிமுக இடதுகை துடுப்பாட்டவீரர் ஜெரேமி சோலோசானோ இடம்பெற்றுள்ளார்.

அதேபோல, தற்போது நடைபெற்று வருகின்ற டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.