Photo: Facebook/ UAE Cricket
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமைப் பராமரிப்பாளர் மோகன் சிங், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக திடீரென மரணமானது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை மைதான பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தவரான மோகன் சிங், கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பணி நிமித்தமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாறுதலாகி சென்றார்.
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமைப் பராமரிப்பாளராக மோகன் சிங் பணியாற்றி வந்த நிலையில் நேற்று (07) திடீரென அவர் மரணமாகி உள்ளார்.
அபுதாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக அவர் மரணித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியரான மோகன் சிங்கின் மரணத்தை ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையும் உறுதி செய்துள்ளது. ஆனால் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.