July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: நடப்புச் சம்பியனை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

இதன்மூலம் ஆறுதல் வெற்றியுடன் இலங்கை அணி டி-20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற 35 ஆவது லீக் போட்டியில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீசியது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க – குசல் பெரேரா ஜோடி அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தது. இதில் குசல் பெரேரா 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து பெதும் நிஸ்ஸங்க அரைச்சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய சரித் அசலங்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதம் கடந்து 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ஓட்டங்களை எடுத்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனால் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை மட்டும் எடுத்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஷிம்ரோன் ஹெட்மயர் 81 ஓட்டங்களையும், நிக்கொலஸ் பூரான் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.