July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது இலங்கை

Photo: Twiiter/ICC

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற சுப்பர் 12 லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியினால் இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் அரை இறுதி வாய்ப்பை இலங்கை அணி இழந்து சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

சுப்பர் 12 சுற்றில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் ஆடி பங்களாதேஷிற்கு எதிராக பதிவு செய்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளுடன் காணப்பட்ட நிலையில், இலங்கையின் குழுவில் உள்ள பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா தோல்வியுறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி டி-20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் மூன்று வெற்றிகளுடன் மொத்தமாக 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆனால், இலங்கை அணிக்கு சுப்பர் 12 சுற்றில் மேற்கிந்திய தீவுகளுடன் எஞ்சியுள்ள ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே, தென்னாபிரிக்காவினை புள்ளிகள் அடிப்படையில் முந்த முடியாத இலங்கை அணி டி-20 உலகக் கிண்ணத்தின் அரை இறுதிச் சுற்றுக்கு செல்கின்ற வாய்ப்பினை இழந்திருப்பதுடன், மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியினை அடுத்து நாடு திரும்பவுள்ளது.

அதேநேரம், சுப்பர் 12 சுற்றின் குழு 1 இல் இருந்து ஏற்கனவே இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில், குழு 1 இல் காணப்படும் ஏனைய அணிகளான அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு அரை இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

தற்போது சுப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியுடன் காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று மந்தமான Net Run Rate இணைக் கொண்டிருப்பதுடன் தமது அரை இறுதி வாய்ப்பினை உறுதி செய்ய தாம் விளையாடும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினைப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கும் தமது எஞ்சிய போட்டிகள் இரண்டிலும் கட்டாய வெற்றி தேவைப்படுவதோடு, பங்களாதேஷ் தாம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியினை தழுவி டி-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.