June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதனால் புதிதாக வரும் 2 அணிகளுக்கு சிறப்பு வசதியாக ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்கள் வரை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என பிசிசிஐ கூறியிருந்தது. அது இந்திய வீரராகவும் இருக்கலாம் அல்லது வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். இதனால் மற்ற ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், 2022 ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களை தக்கவைக்கலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்கலாம். ஆனால் மொத்தமாக 4 வீரர்களை மட்டுமே அணிக்குள் வைத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.90 கோடி வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த தொகை ரூ.95 கோடி மற்றும் ரூ.100 கோடி என உயரும். ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள நினைத்தால் மொத்த தொகையில் ரூ.35 – 40 கோடி வரை அதற்காகவே செலவிட வேண்டிய சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையில் தான் மற்ற வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போது அணிகளுக்கு RTM  அட்டை என்ற வசதி கொடுக்கப்படும். அதாவது ஒரு அணி தனக்கு விருப்பமான வீரரை தக்க வைக்காமல் வெளியேற்றிவிட்டால், ஏலத்தின் போது RTM அட்டையைப் பயன்படுத்தி எந்தவித போட்டியும் இன்றி அதே வீரரை மீண்டும் ஏலம் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறை இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.