இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவி சாஸ்திரி டி- 20 உலகக் கிண்ணம் முடிந்தபின் ஓய்வு பெறுகிறார். அதேபோல, டி-20 அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விராட் கோலியும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனவே, டி-20 உலகக் கிண்ணம் முடிந்தபின் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும். புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியிலும் பி.சி.சி.ஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே, வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோரிடம் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், டி-20 உலகக் கிண்ணத் தொடர் முடிந்த அடுத்த 4 நாட்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது.
ஆகவே, ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றுவிட்டால் இந்திய அணிக்கு அந்த நேரத்தில் பயிற்சியாளர் இல்லாத சூழல் ஏற்படும்.
ஆதலால், புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கும் வரை இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட பி.சி.சி.ஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.