![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/pakistan.jpg?fit=675%2C466&ssl=1)
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய டி- 20 போட்டித் தொடரில் வீரர்களின் திறமைகளின் அடிப்படையில் இம்முறை டி-20 உலகக் கிண்ண அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டி- 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் நிறைவுக்கு வருகிறது.
இதன்படி, டி- 20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணியில் நான்கு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் இடம்பெற்ற குஷ்தில் ஷா, விக்கெட் காப்பாளர் அசாம் கான், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக ஹைதர் அலி, சர்பராஸ் அஹமட் மற்றும் பக்கர் ஜமான் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சொஹைப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சொஹைப் மலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.