July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 அபுதாபி டி-10 லீக்: இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் ஒப்பந்தம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான அபுதாபி டி-10 தொடரில், இலங்கை அணியின் 8 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்தாவது அபுதாபி டி-10 லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான பாப் டூ பிளெசிஸ், அண்ட்ரூ ரஸல், டுவைன் பிராவோ, இயென் மோர்கன், ஜேசன் ரோய், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட வீரர்கள் இம்முறை அபுதாபி டி-10 லீக்கில் விளையாடவுள்ளனர்.

இதனிடையே, இலங்கை அணியின் ஓய்வுபெற்ற வீரர் இசுரு உதான, ஏற்கனவே பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இவரைத் தவிர, மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக இலங்கை அணியின் 4 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, சகலதுறை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் தனன்ஜய லக்‌ஷான், இவர்களுடன் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் மராத்தா அரேபியன்ஸ் விளையாடவுள்ளனர்.

அதேநேரம், தற்போது ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க, நோர்தெர்ன் வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நட்சத்திர வீரர் லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசக்கூடிய 19 வயது இளம் வீரர் மதீஷ பதிரண, பங்களா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.