July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை அணியில் சாம் கரணுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் வீரர் சேர்ப்பு

Photo: Twitter/ CPL

ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர் சாம் கரணுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளின் இளம் சகலதுறை வீரர் டொமினிக் டிரேக்ஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் 14வது சீசனின் இரண்டாம் பாதி போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய சாம் கரண் முதுகுவலி உபாதைக்குள்ளாகினார்.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார்.

இதனால், ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய சாம் கரணுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிசிசிஐயிடம் அனுமதி கோரியிருந்தது.

எனவே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, மாற்று வீரரை தேர்வு செய்ய அனுமதி வழங்கியது.

இதன்படி, சாம் கரணுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 23 வயதான இளம் வீரர் டொமினிக் டிரேக்ஸ் அணியில் சேர்க்கப்படுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றியுள்ள அணியொன்றில் வலைப்பந்துப் பந்துவீச்சாளராக இவர் செயல்பட்டு வந்தார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்த அவர், சம்பியன் பட்டம் வென்ற டுவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

அந்த அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இம்முறை கரீபியன் லீக்கில் அதிக விக்கெட் எடுத்த நான்காவது வீரராகவும் இடம்பிடித்தார்.

இதேவேளை, இம்முறை ஐ.பி.எல் தொடரில் பிளேஓப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறவுள்ள தமது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.