July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை

Photo:Twitter/ IPL

சர்வதேச மற்றும் லீக் உள்ளிட்ட டி-20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார்.

சார்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 51ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி உள்ளடங்கலாக 22 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி-20 போட்டிகளில் மொத்தமாக 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

அத்துடன், உலகளவில் இந்த எண்ணிக்கியை எட்டிய 7ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 1042 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து கிரென் பொல்லார்ட் 758 சிக்ஸர்கள், அண்ட்ரே ரஸல் 510 சிக்ஸர்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் 485 சிக்ஸர்களும், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வொட்ஸன் 467 சிக்ஸர்களும் அடித்து முறையே 4 ஆவது 5 ஆவது இடத்தில் உள்ளனர்.

தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 434 சிக்ஸர்களும், ரோகித் சர்மா 400 சிக்ஸர்களும் அடித்து முறையே 6 ஆவது 7 ஆவது இடங்களில் உள்ளனர்.