July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் அர்ஜுன் டெண்டுல்கர்

Photo: IPL

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்குப் பதிலாக வலதுகை வேகப் பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த பருவத்திற்கான ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்திருந்தார்.

இதனிடையே, டுபாயில் சக அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக 23 வயதுடைய இளம் வேகப் பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த சிமர்ஜீத் சிங், ஐ.பி.எல் வழிகாட்டுதலின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மும்பை அணியில் இணைந்து பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றி மற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது அடுத்த போட்டியில் டெல்லி அணியை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி எதிர்கொள்கிறது.