July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓமான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ருவன் கல்பகே நியமனம்

Photo: Ruwan Kalpage Twitter

இலங்கை கிரிக்கெட்  அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ருவன் கல்பகே, டி – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஓமான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ருவன் கல்பகே தற்போது, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி ஓமான் அணியுடன் அவர் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் துலீப் மெண்டிஸ் செயல்பட்டு வருகின்றார்.

முன்னதாக ருவன் கல்பகே பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுள்ளதுடன், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி – 20 உலகக்கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், ஓமான் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமிலும் இடம்பெற்றிருந்தார்.

அதேநேரம், ருவன் கல்பகே இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள டி- 20 போட்டிகளில்  ஓமான் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தில் ஓமான் அணி முதல் சுற்றில், குழு B யில் இடம்பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து மற்றும் பபுவா நியூகினியா போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.